Tuesday, September 26, 2006

இஸ்லாத்தின் கல்விக் கொள்கை

இன்றைய இளவல்கள் நாளைய தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள். இன்றைய இளைஞர்களின் அறிவுத் தேடல்கள் எதனை நோக்கிச் செல்கின்றன, இன்னும் அவர்களுக்கு வழங்கப்படக் கூடிய கல்வியின் பரிமாணங்களை அவர்கள் எந்த அளவு உள்வாங்கிச் செயல்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே, நாளைய உலகத்தை அவர்கள் எவ்வாறு அமைப்பார்கள் மற்றும் அதன் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதைக் கூற முடியும்.

இன்றைய கல்விக் கொள்கையில் மேற்கத்தியப் போக்குகள் மிகுந்து விட்டதன் காரணமாக, இளம் குறுத்துக்களில் இருந்து பல்கலைக் கழகங்கள் வரைக்கும் இந்த மேற்கத்திய போக்கினால் தீர்மானிக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் தான், அவர்களின் மூளைகளில் ஏற்றி வைக்கப்படுகின்றன. இதே போக்கிலே முஸ்லிம்களும் காலம் காலமாக இந்த மேற்கத்திய சிந்தனை வழிக் கல்வியினூடாகப் பயணம் செய்ததன் விளைவு, அவர்கள் தங்களை அறியாமலேயே தங்களது சுய அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடிய பிற்போக்குத் தனத்திற்குத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பது தான் பரிதாபமான செய்தியாகும்.

காரணம் என்னவெனில், இந்த உலக வாழ்வின் தேவைகளுக்காக அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அவர்களது மறுமையையும், இன்னும் உயிரினும் மேலான இறைநம்பிக்கையையும் போக்கி விடக் கூடிய, தலைமுறை தலைமுறையாக கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாம் அவர்களிடமிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருவதை அவர்கள் உற்று நோக்கத் தவறியதன் விளைவை இன்று அனுபவித்து வருகின்றார்கள்.

இழந்த அந்த பாதையை மீளக் கட்டியமைப்பதற்கு இன்றைய சமூகம் முயற்சிக்கும் பொழுது, பிற்போக்குவாதத்தை மீளக் கட்டியமைக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு, அவ்வாறு ஈடுபடுபவர்கள் உள்ளாவதோடு, ஊடகங்களின் செல்வாக்கின் காரணமாக அவர்கள் தங்களது முயற்சியின் நிராசையடைந்து விடக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகி விடுகின்றன.

இஸ்லாத்தினையும் இஸ்லாமியக் கல்விக் கொள்கையையும் மீளக் கட்டியமைக்க முயற்சிக்கும் அனைவருக்கும் இக்கட்டுரை ஒரு உற்சாக டானிக்காக அமைந்தால், அதுவே இக்கட்டுரையின் நோக்கம் நிறைவேறியதாகவும் அமையும். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..!

கல்வியில் இஸ்லாமியப் பாரம்பரியம் எவ்வாறிருந்ததெனில்...!

கி.பி.1048 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...

கஜ்னா நகரில் அல் பிரூனி மரணப் படுக்கையில் இருந்தார். அப்போது அபுல் ஹஸன் என்னும் மார்க்க அறிஞர் அவரைக் காணச் சென்றார். இருவரும் நெடுநாளைய நண்பர்கள்.

அல் பிரூனியால் சரியாகப் பேசக் கூட முடியவில்லை! மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது.

தம் நண்பரை அருகில் அழைத்து, தட்டுத் தடுமாறி கேள்வி ஒன்றைக் கேட்டு முடித்தார் : ''அபுல் ஹஸன், இறந்தவரின் சொத்திலிருந்து அவரின் தாயைப் பெற்ற பாட்டிக்குக் கிடைக்க வேண்டிய பங்கு என்னவென்று முன்பு சொன்னீர்? அதை மறுபடியும் சொல்லும்!'' என்றார்.

''நீங்கள் இந்த நிலையில் படுத்திருக்கும்போது நான் அதை வேறு சொல்லி, அதைக் கேட்கும் சிரமத்தை உங்களுக்குக் கொடுக்க வேண்டுமா? என்றார் அபுல் ஹஸன்.

''ஆம், சொல்லும்! தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ளாமல் இறப்பதை விட தெரிந்து கொண்டு இறப்பது மேலல்லவா?

அவர் கேட்ட பாகப் பிரிவினைக் கணக்கைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தார் மார்க்க அறிஞர். கேட்ட அல்பிரூனி அதைத் திரும்ப ஒப்புவித்தார்.

'இன்னும் தாமதித்தால் மேலும் பேசி, தம்மைத் தாமே சிரமப் படுத்திக் கொள்வார் அல்பிரூனி' என்று அஞ்சிய அறிஞர் விடை பெற்றுக் கிளம்பினார்.

வெளியில் வந்த அபுல் ஹஸன் சில அடி தூரமே நடந்திருப்பார். அல் பிரூனியின் வீட்டினுள்ளிருந்து அழுகுரல் எழும்பியது.

திரும்பிச் சென்று பார்த்த போது அல் பிரூனியின் ஆவி பிரிந்து விட்டதென்று தெரிந்தது.

- யுநெஉவழனநள கசழஅ ஐளடயஅ

கல்வி கற்க வேண்டியதன் அவசியம், அதன் முக்கியத்துவத்தைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகள் பல நமக்கு விளக்குகின்றன. உங்களில் சிறந்தவர் யாரெனில், கல்வியைக் கற்பவரும், அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பவருமே என்றார்கள். இன்னும் திர்மிதியில் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றதொரு நபிமொழியில், 'யாரொருவர் கல்வியைக் கற்றுக் கொள்ளச் செல்கின்றாரோ, அத்தகையவர் திரும்பும் வரை அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரடக் கூடிய போராளியாக) இருக்கின்றார்.

கீழே மேற்கத்திய கல்வி அமைப்புகள் இஸ்லாத்திற்கு எந்தளவு ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றன என்பன பற்றி சிறிது பார்ப்போம்.

கடந்த கால வரலாற்றில், இஸ்லாமிய நாடுகளைக் கைப்பற்றி தங்களது முடியாட்சியை நிறுவிய மேற்கத்தியர்கள், அங்கு தங்களது கல்வி நிலையங்கள் பலவற்றை நிறுவினார்கள். உதாரணமாக, பாகிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள எட்சிசன் கல்லூரி (நுவஉளைழைn), பங்களாதேஷ் - டாக்காவில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி, மலேசியா – கோலாலம்பூரில் உள்ள செயிண்ட் ஜான் இன்ஸ்டிடியூஸன் போன்றவை சில குறிப்பிடத்தக்க மேற்கத்தியக் கல்வி நிலையங்களாகும். இவ்வாறு அமைக்கப்பட்ட கல்வி நிலையங்களின் பணிகள் என்னவென்றால், சிறிது சிறிதாக இஸ்லாமிய மாண்புகள் மறக்கடிக்கப்பட்டு, முஸ்லிம் குழந்தைகளை மேற்கத்தியக் கலாச்சாரத்திற்குத் தயாராக்குவதே இவற்றின் முக்கியக் குறிக்கோளாக இருந்து வந்துள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் இருந்து வெளிவரக் கூடிய குழந்தைகள் பின்னாட்களில், இஸ்லாமிய தலைமைத்துவம், இஸ்லாமிய கல்வி, இஸ்லாமிய மாண்புகள் போன்றவை தேவையற்றவை இந்தக் காலத்துக்கு ஒவ்வாவதவை என்பன போன்ற கருத்துக்களை இஸ்லாமியர்கள் சார்பில் எடுத்து வைக்கக் கூடிய கல்வியாளர்களாக, அறிஞர்களாக பரிணமிக்கக் கூடியவர்கள் இருப்பார்கள்.

இஸ்லாமும் இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகளும் இஸ்லாமிய சட்ட திட்டங்களும் இந்த உலகத்தைப் பீடித்திருக்கும் அஞ்ஞான இருளை அகற்றக் கூடிய தகுதி வாய்ந்தவை என்று இஸ்லாமிய அறிஞர்கள் தங்களது கருத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, மேலே நாம் சொன்ன மேற்கத்திய கல்வி நிலையங்களினால் உருவாக்கப்பட்ட, முஸ்லிம்களே இத்தகைய இஸ்லாமியவாதிகளின் கருத்துக்களை மறுத்துரைக்கக் கூடியவர்களாக திகழ்வார்கள். இஸ்லாமியவாதிகளின் கருத்துக்கள் அமுக்கப்படும் அதே வேளையில், இஸ்லாத்தின் போர்வையில் ஒளிந்திருக்கும் இந்த மேற்கத்திய மூளைக்கார முஸ்லிம்களின் கருத்துக்கள் பலம் வாய்ந்த மேற்கத்திய மீடியாக்களினால் விரிவாகக் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் மேற்கத்திய ஆதராவளர்களின் கருத்துக்கள் பலம் பெறுவதோடு, இஸ்லாமியவாதிகளின் கருத்துக்கள் பலமிழக்கச் செய்யப்படும். இதன் மூலம் ஏற்படும் இஸ்லாமிய வீழ்ச்சியை, மேற்குலம் தனக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்கின்றது.

இன்றைய மேற்கத்திய ஊடகங்களில் பலம் வாய்ந்தவைகளாக உள்ள பிபிஸி உலகச் சேவை, சிஎன்என், மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா போன்ற ஊடகங்கள் இஸ்லாமிய மண்ணில் குழப்பத்தையும், நிச்சமற்ற தன்மையையும் உருவாக்கப் போராடிக் கொண்டிருக்கின்றன. தங்களது திரிக்கப்பட்ட செய்திகள் மூலம் முஸ்லிம்களைக் குழப்பி, இஸ்லாம் தடை செய்யப்பட வேண்டியதொரு கொள்கையே என்ற கருத்தை முஸ்லிம்களின் மனங்களில் மேலோங்கச் செய்ய பாடுபடுகின்றன.

கடந்த நவம்பர் 15, 2003 சனிக்கிழமையன்று துருக்கியில் இரண்டு யூத பிரார்த்தனைக் கூடங்களுக்கு அருகில் வெடிகுண்டு வெடித்து, பலர் மரணமடைந்தார்கள். இதனைச் செய்தியாகச் சொல்லும் பிபிசி, ''எந்தவித பயங்கரவாதத்திலும் ஈடுபடாத துருக்கிய யூதர்கள்'' மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற அடைமொழியை இணைத்துச் சொல்கின்றது. இதன் மூலம் யூதர்கள் அமைதியானவர்கள் என்ற கருத்தையும், முஸ்லிம்கள் கொலைகாரர்கள் என்ற கருத்தையும் அது திணிக்க முற்படுகின்றது.

இன்றைக்கு முஸ்லிம் உலகமானது உலகின் மற்றைய பாகங்களை விட அதிகமான அளவில் படிப்பறிவற்றவர்களை அதிகமாகக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் மத்தியில் படிப்பறிவற்ற தன்மை நிலவக் கூடாது என்பதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களே நேரடியாக நடவடிக்கை எடுத்த சம்பங்கள் இங்கு நோக்கத்தக்கது. பத்ர் யுத்தக் கைதிகள் தங்களை விடுவித்துக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய பணத்திற்குப் பகரமாக, முஸ்லிம்களின் குழந்தைகளில் பத்துக் குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டி, அதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாமியனாக வாழக் கூடிய ஒருவர் கல்வி அறிவில் சிறந்தவராகவோ அல்லது அறிஞராகவோ அல்லது எழுதப்படிக்கத் தெரிந்தவராகவோ இருத்தல் அவசியம் என்பதை மேற்கூறிய சம்பவம் நமக்கு எடுத்தியம்புகின்றது.

இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரசோட்சிய நாட்களில் இஸ்லாமிய நாடுகளின் தலைநகரங்களில் பொது நூலகங்கள் இருந்து வந்துள்ளன. ஸ்பெயினின் கார்டோபா மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த பொதுநூலகங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் இருந்து வந்துள்ளன.

அரிஸ்டாட்டில், பிளாட்டோ, பைதோகோரியன், கிரேக்க வானியல் போன்ற மொழிபெயர்ப்பு பணிகளின் மூலமாக, அரபி மொழியானது அன்றைய நாட்களில் முக்கியமான அறிவியல் மொழியாகப் பயன்பட்டுள்ளது நோக்கத்தக்கது. மேற்கூறியவர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து அதனை இமாம் கஸ்ஸாலி தனது தஹாபுத்துல் ஃபலாசிஃபா என்ற நூலின் மூலமாகவும், இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தனது கிதாபுல் இப்தல் என்ற நூலின் மூலமாகவும் மறுப்புரை வழங்கியுள்ளார்கள்.

மேற்கத்தியக் கல்விக் கொள்கையினால் நம் குழந்தைகளின் நிலை என்னவாகும்?

இன்றைக்கு இஸ்லாமிய பெற்றோர்களில் பலர் தங்களது குழந்தைகளின் நிலை என்னவாகும் என்பது குறித்து அச்சம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களுக்காக நாம் சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம். இதன் மூலம் வெற்றிகரமாக, நல்ல ஒழுக்கப் பண்புகளைக் கொண்ட, இஸ்லாமிய சிந்தனையின் மீது ஆசை கொண்ட சமூகத்தை உருவாக்கவும், அந்தக் குழந்தைகளின் வாழ்வில் அவை பரிணமிக்கவும் இது உதவிகரமாக அமையும்.

இருப்பினும், நம்முடைய குழந்தைகள் பலர் சிறுமதியின் காரணமாக இந்த மேற்கத்திய கலாச்சாரங்களுக்குப் பலியாகி விடுகின்றார்கள், நம்முடைய எதிர்பார்ப்பைப் பொய்ப்படுத்தி விடுகின்றார்கள். இந்த மேற்கத்தியப் போக்கு அவர்களது வாழ்வில் ஒழுக்கமின்யையும், மரியாதை தெரியாத பண்பாட்டையும், சுயநலத்தையும் விதைத்து விடுகின்றது. அவர்கள் தங்களது வாழ்வை தங்களது நோக்கப்படி அமைத்துக் கொள்கின்றார்கள். மனம் போன வாழ்வை வாழ ஆரம்பித்து விடுகின்றார்கள். மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர்களாகவும் மாறி விடுகின்றார்கள். இந்த நிலை எவ்வாறு அவர்களிடம் குடி கொண்டது?

இந்த நிலை எவ்வாறு உருவானது என்பதை நாம் சற்று ஆய்வு செய்தோமென்றால், அவர்களுக்கு ஊட்டப்பட்ட கல்விக் கொள்கை தான் காரணமென்பதை வெகு எளிதாக அறிந்து கொள்ளலாம். மேற்கத்திய கல்வி நிலையத்தில் கல்வி கற்கக் கூடிய உங்களது குழந்தையின் அன்றாட பள்ளிக் கூட படிப்பு எந்த முறையில் கழிகின்றது என்பதை ஆய்வு செய்யுங்கள். இறுதியில், பள்ளியை விட்டு நிறுத்துவதே மிகச் சிறந்தது என்ற முடிவுக்குத் தான் நீங்கள் வருவீர்கள். அவனது கல்வியும், கற்றலும் மிகவும் ஆரோக்கியமான தளமாக அமைய வேண்டும் என்று விரும்புவீர்கள். எமது இந்த கருத்து சரிதானா? வகுப்பறைகளுக்குள் குழந்தைகள் நுழைந்தவுடன் நடப்பதென்ன தெரியுமா?

முதல் பாடம் புவியியல் என்று வைத்துக் கொள்ளுங்கள் ...!

உங்கள் குழந்தைக்கு உலகத்தில் உள்ள பல நாடுகளைப் பற்றிக் கற்றுக் கொடுக்கப்படும். அவற்றில் வளங்கள், மக்கள் தொகை, மக்கள், பண்பாடு, மொழி, தேசியக் கொடி, இன்னும் பல வற்றையும் கற்றுக் கொடுப்பார்கள். இவ்வாறு கற்றுக் கொடுக்கப்படும் நாடுகள் முஸ்லிம் நாடுகளாகவே இருந்தாலும், இந்த நாடுகள் யாவும் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொண்ட நாடுகளும் அல்ல, இன்னும் இஸ்லாமும் கூட இந்த நாடுகளை இஸ்லாமிய நாடுகள் எனவும் ஒப்புக் கொண்டதும் அல்ல என்று நினைக்கும்பட்சத்தில் அதுவரை பாதகமில்லை. ஆனால் இவ்வாறு பல நாடுகளாக முஸ்லிம்கள் பிரிந்து கொண்டு, தங்களை தேசிய அடையாளங்களுக்குள் ஒட்டி வைத்துக் கொண்டிருப்பதை இஸ்லாம் என்றுமே அங்கீகரிப்பதில்லை. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் :

நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. (3:103)

முஸ்லிம்களை முஸ்லிம் என்ற ஒரே கொள்கைவாதிகளாகப் பார்க்காமல், அவர்களை ஆசியன் என்றும் அரபுக்கள் என்றும் அல்லது கறுப்பர்கள் என்றும், அல்லது பங்களாதேஷிகள், பாகிஸ்தானிகள், இந்தியர்கள் என்றே அடையாளம் குறிக்கும். அவர்களை அல்லாஹ்வின் அடிமைகள், நாம் அனைவரும் ஒரே கொள்கையைக் கொண்ட – அல்லாஹ்வின் மீது இறைநம்பிக்கை கொண்ட மக்கள் என்று முஸ்லிம்களை அடையாளப்படுத்தாது.

அடுத்த பாடம் அறிவியலாக இருக்குமானால்...

நம்முடைய குழந்தை அறிவியலைக் கற்றுக் கொண்டால் நாளை வருங்காலத்தில் சிறந்த அறிவியலாளராக உருவாகுமே என்று நினைக்கலாம். அதில் தவறென்ன இருக்க முடியும். ஆனால், இன்றைய அறிவியல் கொள்கைகளில் பல இஸ்லாமிய அடிப்படைகளுடன் மோதக் கூடியவைகளாக இருக்கின்றன. அனுமானங்களும், உறுதிப்படுத்தப்படாத கொள்கைக் கோட்பாடுகளும் இன்றைய அறிவியலில் உலா வந்து கொண்டிருப்பதையும், அதனை எவ்வாறு பிரித்தறிவது என்பதனையும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை என்பதனையும் நாமறிவோம்.

பரிணாமக் கொள்கையானது, மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று கூறுகின்றது. ஆற்றலைப் பற்றிய கோட்பாடானது, ஆற்றல் நிலையானது – அதனை ஆக்கவும் இயலாது, அழிக்கவும் இயலாது என்கிறது. அது ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாறிக் கொண்டே செல்கின்றது என்று கூறுகின்றது. மனிதனையும் விலங்கினங்களுடன் சேர்த்துப் பார்க்கப்படுகின்றது. நீர் சுய சுழற்சி முறையில் அமைந்ததெனக் கூறப்படுகின்றது. இவை யாவும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் முரண்படக் கூடியவைகளாகும். அல்லாஹ் ஒருவன் தான் அனைத்தையும் ஆக்குபவனும், அழிப்பவனும், இன்னும் நிர்வகித்து வருபவனுமாவான்.

படைத்தவன் என்பவன் ஒருவன் இருக்கின்றான் என்ற அடிப்படைக் கோட்பாட்டையே இந்த மேற்கத்திய அறிவியல் கொள்கை தகர்ப்பதாக உள்ளது. எந்த அடிப்படையும் இல்லாத, ஆதாரமும் இல்லாத பொய்யான அறிவியலான இவற்றில் எதனை உங்களது குழந்தை கற்றுக் கொண்டு வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த மாதிரியான கொள்கைகள் உங்களது குழந்தைகளின் கருத்தாக்கத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

உங்கள் குழந்தை கற்கும் வரலாற்றுப் பாடத்திற்கு வருவோம்..

இன்றைக்கு வெற்றிகரமாக வரலாற்றுப் பாடமாக கற்றுக் கொடுக்கப்படுவது என்னவோ, மேற்கத்திய வரலாற்றுச் சம்பவங்கள். அவற்றின் போர்கள், அரசியல் மாற்றங்கள், வளர்ச்சிகள், அவற்றின் சாதனைகள், கண்டுபிடிப்புக்கள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கற்பிக்கப்படும் அதே வேளையில், இஸ்லாத்தின் சாதனைகள் வராற்றிலிருந்து மறைக்கப்படுகின்றன அல்லது முக்கியத்துவமிழந்ததாகக் காட்டப்படுகின்றன. இஸ்லாமிய வரலாறு குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகக் காட்டப்படுகின்றது. இஸ்லாம் பிற்போக்குத்தனமானதாகவும், அடக்குமுறை கொண்டதாகவும் சித்தரிக்கப்படுகின்றது. மேற்கத்திய முதலாளித்துவம் செய்த போர்கள் மிகைப்படுத்தப்படுவதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் போர்களும், போர் முறைகளும், அதன் காரணங்களும் முற்றிலும் மறைக்கப்பட்டு விடுகின்றன.

அடுத்தது உடற்பயிற்சி முறைகளை எடுத்துக் கொள்வோம்..

மேற்கத்திய நாகரீகத்தின் கீழ் அமைந்துள்ள உடற்பயிற்சி முறைகள் ஒழுக்கத்தையும், மனநிலைக் கட்டுப்பாட்டையும் போதிப்பதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், இஸ்லாம் குறிப்பிட்ட வரையறைக்குள் ஆடைகளை அணிய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. மறைவிடங்கள் முறையான அளவில் மறைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகின்றது. அதனைத் தனது திருமறையில்..,

நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. (7:26)

இன்றைக்கு இத்தகைய கல்வி நிலையங்களில் கற்கக் கூடிய குழந்தைகள் அணியக் கூடிய ஆடைகள் இஸ்லாம் வரையறுத்துக் கூறியிருக்கும் ஆடை அளவுகளை ஒத்ததாக இருக்கின்றதா? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய குழந்தைகள் நிர்வாணமாகத் தான் பள்ளிக்குச் சென்று வருகின்றன.

மதக் கல்வி (சுநு-சுநடபைழைரள நுனரஉயவழைn)யை எடுத்துக் கொள்வோம்..

இந்த மதக் கல்வியின் பொழுது, ஒவ்வொரு மதத்தைப் பற்றியும் குழந்தைகள் புரிந்து கொள்வதற்கு வழி அமைக்கின்றது. மற்ற மதங்களான கிறிஸ்துவம், யூதம், இந்து, சீக்கியம் போன்ற மதங்களைப் போல இஸ்லாமும் ஒன்றாகக் காட்டப்படுகின்றதே ஒழிய, இஸ்லாத்தின் தனித்துவமும், வாழ்க்கை நெறி போன்றவற்றின் சிறப்புக் கூறுகள் சரியான முறையில் பாடத்திட்டங்களில் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஏன், இஸ்லாத்தினை அதன் உண்மையான வடிவில் கூட வழங்கப்படுவதில்லை, அது மனிதனின் அனைத்துத் துறைகளுக்கும் வழி காட்டுகின்றது, தனிப்பட்ட ரீதியிலும், சமூக ரீதியிலும் அது மனிதனுக்கு பூரண வழிகாட்டுதல்களை வழங்குகின்றது என்பன போன்றவைகளை பாடத்திட்டங்களில் காண முடிவதில்லை.

ஓய்வு நேரங்களில்...

ஓய்வு அறைகளில், அல்லது இடைவேளைகளில் இன்றைய சினிமா முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை, கிரிக்கெட் முதல் கால்பந்தாட்டம் வரை ஒவ்வொரு ஹீரோவைப் பற்றியும் கதையாடப்படுகின்றது. ஹீரோ வழிபாட்டுக்கான வாசல் அங்கே திறக்கப்படுகின்றது. சினிமா ஹீரோக்களைப் போலவும், விளையாட்டு ஹீரோக்களைப் போலவும் வர வேண்டும் என்ற எண்ணம் ஊட்டப்படுகின்ற அதேவேளை, உன்னதமான வாழ்வுக்கும், ஒழுக்கமான வாழ்வுக்கும் சொந்தக்காரர்களான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பற்றியோ அல்லது அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த சரித்திர நாயகர்களாக நபித்தோழர்களைப் பற்றியோ, அவர்களது வாழ்வியல் சாதனைகளைப் பற்றNphய கலந்துரையாடப்படுவதில்லை. மாறாக, கூடா நட்புக் கொண்ட மாடோன்னா பற்றியும், பாடகன் மைக்கேல் ஜாக்ஸன் பற்றியோ தான் கலந்துரையாடப்படுகின்றன.

மேலே நாம் பார்த்த சில ஆதாரங்களே போதுமானது, நம்முடைய குழந்தைகளை இத்தகைய கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றி, இஸ்லாமிய கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்கு..! இவ்வாறு அந்தக் கல்வி நிலையங்களில் இருந்து நம் பிள்ளைகளை நிறுத்தி விட்டால் போதுமானதா? நம் பிள்ளைகள் மேற்கத்திய சிந்தனைத் தாக்கத்திலிருந்து விடுபட்டு விடுவார்களா? துரதிருஷ்டவசமாக, ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த நாட்டின் தேசிய கல்விக் கொள்கை தயாரித்தளித்திருக்கும் கல்வி முறைப்படி தான் எந்தவொரு பள்ளியும் தனது பாடத்திட்டத்தை நடத்த முடியும், அப்படிப்பட்ட பள்ளிகளுக்குத் தான் அனுமதியும் வழங்கப்படும். எனவே, மேலே நாம் பார்த்த அத்தனை ஆபத்துக்களும், தேசியக் கல்விக் கொள்கையால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களிலும் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இன்னும், கல்வி என்பது பள்ளிக்கூடம் என்ற வட்டத்துடன் மட்டும் சுருங்கி விடுவதில்லை. சமூகமும் கூட பிள்ளைகளுக்கு சரியான கல்வியைப் போதிப்பதில் கடமையாற்ற முடியும். கரும்பலகைகள் இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல், வகுப்பறைகள் இல்லாமல், சமூகமே ஒரு பள்ளிக் கூடாமாக, வானொலி, தொலைக்காட்சி, விளம்பரப் பலகைகள், தினசரிகள், மாதாந்திர இதழ்கள் மூலமாக இஸ்லாத்தின் மாண்புகளைச் சொல்ல முடியும், பிள்ளைகளுக்கு அதன் மூலம் இஸ்லாமியக் கல்வியை ஊட்ட முடியும். இவ்வாறான, மாற்றுக் கல்விச் சூழலில் வளரக் கூடிய குழந்தைகளுக்கு மேலே நாம் சொன்ன மாதிரியான அளவில் இஸ்லாமியக் கல்வியைக் கொண்டு சேர்க்கவில்லை என்றால், அந்தக் குழந்தைகள் இஸ்லாம் அல்லாத இணைவைப்புக் கலாச்சாரத் தாக்கத்தோடு வளர்வதோடு, சரியான இஸ்லாமிய கல்வியை விட்டும் பாராமுகமாக்கப்பட்டு விடுவார்கள் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

இஸ்லாமிய அரசு உருவாகுமென்றால்,

உங்கள் குழந்தைகளைப் பயிற்றுவிக்கும் கல்விக் கொள்கை எவ்வாறு இருக்கும்..?

பொதுமக்களுக்கு கல்வியை இலவசமாக அளிப்பதென்பது, அரசின் தார்மீகக் கடமையாக இருக்கும். இலவசமாக வழங்கக் கூடிய இந்தக் கல்வியானது முதல் வகுப்பு முதல் பல்கலைக்கழகங்கள் வரைக்கும் வழங்கப்படும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கு அவனது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தேவையான கல்வி முறையின் கீழ் கல்வி போதிக்கப்படும். இன்னும் அத்துடன் மன ரீதியாக ஒரு முஸ்லிமைத் தயார்படுத்துவதற்கான, இஸ்லாமிய வழிகாட்டுதல்களுடன் அமைந்த பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுப் போதிக்கப்படும். ஒரு குழந்தையின் செயல்முறைகள் இஸ்லாமிய ரீதியில் அமைக்கப்படுவதோடு மட்டும் நின்று விடாது, அந்தக் குழந்தையின் விருப்பு, மற்றும் வெறுப்புக் கூட இஸ்லாமாக அமைவதற்கான வழிகாட்டுதல் அதில் இருக்கும். இதன் மூலம் வரக் கூடிய சந்ததிகள் தங்களுக்கு ஆகுமானது எது மற்றும் ஆகாதது எது என்பது பற்றிய தெளிவான கொள்கையைக் கொண்டிருப்பார்கள்.

இஸ்லாமிய உலகில் ஒரு நாள் பொழுது எவ்வாறு ஆரம்பாகுமெனில், பள்ளிக் கூடங்களில் பாடப் போதனைகள் இஸ்லாமிய வாழ்த்துக்களுடன் (ஸலாத்துடன்) ஆரம்பமாகும். இஸ்லாமிய அடிப்படையான அகீதா அனைத்து பாடத்திட்டங்களுக்கும் வழி அமைக்கும். நிரூபணம் செய்யப்படாத கொள்கைகளான பரிணாமமும், மிகப் பெரிய வெடிப்பு (டீபை டீயபெ) போன்ற உண்மைக்கு மாற்றமான கொள்கைகள் போதிக்கப்பட மாட்டாது. அவை ஏன் போதிக்கப்படுவதில்லை என்பதற்கான தகுந்த காரணங்கள் அங்கு கற்பிக்கப்படும். அல்லாஹ் தந்திருக்கும் ஆதாரங்கள் அங்கு முன் வைக்கப்படும்,

குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை.

10:38 இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!'' என்று. (10:37)

மேற்கத்திய உலகின் அறிவியல் கொள்கையானது படைத்தவன் என்ற ஒருவன் இருக்கின்றான் என்ற இறைவனது இருப்பைப் பற்றி கேள்வி எழுப்புகின்ற அதேவேளையில், இஸ்லாமானது தனது கல்விக் கொள்கை மூலம் இறைவன் இருக்கின்றான் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும். நீரின் ஆதாரம் பற்றி அதன் சுழற்சி பற்றியும் எடுத்துக் கூறும் பொழுது, இறைமறுப்புக் கொள்கைக்கு வழி அமைக்காமல், உண்மையில் அதன் சுழற்சி எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை அல்லாஹ் கூறியிருக்கின்றவாறு அது மக்களுக்குத் தெளிவுபடுத்தும். கடலில் உள்ள நீர் ஆவியாகி மேகங்களாகின்றன. அந்த மேகங்கள் வளர்ந்து பல படிநிலைகளைக் கடந்து, குளிர்விக்கப்பட்டு மழையாக மீண்டும் நிலத்தில் பொழியப்படுகின்றன. நிலத்தில் பொழியப்படும் நீரானது மீண்டும் கடலைப் போய்ச் சேருகின்றது. இவ்வாறாக நீராதாரச் சுழற்சி நடைபெறுகின்றது என்று அறிவியலையும் ஆன்மீகத்தையும் உண்மையின் அடிப்படையில் ஒன்று சேர்க்கும்.

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் முலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (2:164)

அடுத்ததாக கலாச்சாரப் பாடம் மற்றும் மொழி, புவியியல், வரலாறு அல்லது ஃபிக்ஹு கற்றுக் கொடுக்கப்படும். புவியியலைப் பொறுத்தவரை இஸ்லாமிய பூகோள எல்லைகள் முதன்மைப் பாடங்களாக இருக்கும். இஸ்லாமிய உலகின் பரந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள் அங்கு முன்வைக்கப்படும். எவ்வாறு ஒரு தலைமையின் கீழ் பரந்த விரிந்து வாழும் முஸ்லிம் உம்மத் ஒருங்கிணைய முடியும் என்பது பற்றியும், ஒரு தலைமையின் கீழ் வாழ முடியும் என்பது பற்றியும், இஸ்லாமிய உம்மத்தின் வளங்களை எவ்வாறு பாதுகாத்து அதனை நிர்வகிக்க முடியும் என்பது பற்றியும் போதிக்கப்படும்.

மொழியியலைப் பொறுத்தவரை குழந்தைகள் குர்ஆனின் மொழியைக் கற்றுக் கொள்வார்கள். பிரஞ்சும், ஜெர்மனிய மொழியும் உயர்தரப் பாடங்களில் கற்றுக் கொடுக்கப்படும். அடிப்படை மொழியாக அரபியைக் கற்றுக் கொடுக்கப்படும், அதன் மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கப்படும். பள்ளிக்கு வெளியே அரபியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்காது. இவ்வாறாக, அரபியை நேரடியாகக் கற்றுக் கொள்வதன் மூலம் வருங்கால சந்ததியினர் குர்ஆனுக்கு அர்த்தம் அடங்கிய தொகுப்புக்களைத் தேடிக் கொண்டிராமல், நேரடியாக அவர்கள் குர்ஆனை அதன் மூல மொழியிலேயே கற்றுக் கொள்ளும் நிலை உருவாக்கப்படும். இதன் மூலம் முந்தைய காலத்தில் எவ்வாறு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் முன்னோர்கள் பாதுகாத்தார்களோ, அந்த நிலை இதனால் மீண்டும் உருவாக்கப்படும்.

வரலாற்றைப் பொறுத்தவரை, பரந்து விரிந்து கிடக்கும் இஸ்லாமிய வரலாற்றுப் பொக்கிஷங்கள் குழந்தைகளுக்கு பாடத்திட்டங்களாக வழங்கப்படும். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்த கலீபாக்களின் வரலாறு, அவர்களது ஆட்சி முறைகள், அவர்களது காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ய வளர்ச்சி எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றியும், இஸ்லாமிய சாம்ராஜ்யமானது உலக வளர்ச்சிக்காக அது கண்டுபிடித்த சாதனங்கள், செய்து காட்டி அறிவியல் அற்புதங்கள், மருத்துவத்துறைச் சாதனைகள் போன்றவற்றை கற்பிப்பதோடு, இஸ்லாம் கல்வி வளர்ச்சியிலும், நாகரீகத்திலும் மேம்பாடுடன் இருந்த பொழுது, உலகம் எவ்வாறு அறியாமை இருளில் மூழ்கி இருந்தது என்பதையும், அந்த இருளை எவ்வாறு தனது கல்விக் கொள்கை மூலம் அகற்றிக் காட்டியது என்பதையும் அங்கு குழந்தைகளுக்குப் போதிக்கப்படும்.

இஸ்லாமிய சட்டக் கல்வித் துறையில் குழந்தைகளை நிபுணர்களாக உருவாக்கப்படும். இதன் மூலம் இஸ்லாமிய சட்டக் கலையின் விரிவான சட்ட திட்டங்களை அவர்கள் கற்றுக் கொள்பவர்களாக இருப்பார்கள், அதன் மூலம் இஸ்லாமிய சட்டத்தை நல்ல முறையில் புரிந்து கொள்ளும் நிலை உருவாக்கப்படும்.

மொத்தத்தில் இஸ்லாமிய கல்விக் கொள்கையானது, இஸ்லாமிய விழுமங்களைக் கட்டிக் காக்கக் கூடிய பணியைச் செய்யும். அரசின் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதழ்கள் இஸ்லாமிய கருத்துக்களையும், விழுமங்களையும் மேலோங்கச் செய்யும் பணியைச் செய்யக் கூடியவைகளாக இருக்கும்.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template