Showing posts with label shoe attack. Show all posts
Showing posts with label shoe attack. Show all posts

Wednesday, December 17, 2008

புஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் - புகைப்படங்கள் !


கொண்டாடுவோம்! இது வீரத்தின் திருநாள்.
ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும்
தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும்
வலிமையானது இந்தத்தாக்குதல்.
வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை.
மாவீரன் ஸய்தி !
முன்தாதர் அல் ஸய்தி - உண்மையிலேயே ஒரு மாவீரன்தான்.



அமெரிக்க வல்லரசின் இராணுவம்,
அதன் உளவுத்துறைகள்,
அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்..‏

இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம்.

நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து விட்டது. கொத்துக் குண்டுகள் முதல் அபு கிரைப் வரையிலான எல்லா வழிமுறைகள் மூலமும் இராக்கைக் குதறிவிட்டது. ஷியா, சன்னி, குர்து.. என எல்லா விதமான பிரிவினைகளையும் பயன்படுத்தி இராக் மக்களைத் துண்டாடி விட்டது. பொம்மை ஆட்சியை அமைத்து துரோக பரம்பரையையும் தோற்றுவித்து விட்டது..

‏‏இருப்பினும் “பலான தேதியில் பலான இடத்துக்கு அமெரிக்க அதிபர் வருகிறார்” என்று முன்கூட்டியே அறிவிக்கும் துணிவு அமெரிக்க அரசுக்கு இல்லை. ஊரடங்கிய பின்னிரவு நேரத்தில், வைப்பாட்டி வீட்டுக்கு விஜயம் செய்யும் நாட்டாமையைப் போல பாக்தாத் நகரில் புஷ்ஷை இறக்கியது அமெரிக்க உளவுத்துறை.

அவர் இராக் மக்களிடம் விடை பெறுவதற்கு வந்தாராம்!
2004 ஆம் ஆண்டு இராக்கில் புஷ்ஷின் படைகள் ஆரவாரமாக நுழைந்த அந்த நாளை உலகமே அறிந்திருந்தது. விடை பெறும் நாளோ, இராக் மக்களுக்கே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.‏‏

இரகசியமான இந்த விடையாற்றி வைபவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலமாக இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு கூழாங்கல், ஒரு அழுகிய முட்டை, ஒரு தக்காளி எதையும் அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தின் அரங்கினுள் ஸய்தி எடுத்துச் சென்றிருக்க முடியாது. இப்படியொரு ஆயுதத்தை ஒரு மனிதன் அணிந்து வரமுடியும் என்று அமெரிக்க உளவுத்துறை எதிர்பார்த்திருக்கவும் முடியாது.
எப்பேர்ப்பட்ட கவித்துவம் பொருந்திய தாக்குதல்! புஷ் கொல்லப்படவில்லை. காயம்படவுமில்லை. செருப்படிக்குத் தப்பி ஒதுங்கி சமாளித்து அந்த மானக்கேடான சூழ்நிலையிலும் மீசையில் மண் ஒட்டியது தெரியாத மாதிரி, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அமெரிக்கப் பெருமிதம் அடி வாங்காத மாதிரி, கம்பீரமான அசட்டுச் சிரிப்பின் பல வகைகளை நமக்குக் காட்டுகிறார் புஷ்.

சொற்களே தேவைப்படாத படிமங்களாக நம் கண் முன் விரிந்த அந்தக் காட்சி 4 ஆண்டுகளாக இராக்கில் அமெரிக்கா வாங்கி வரும் செருப்படிகள், அதன் அவமானங்கள், அதன் சமாளிப்புகள்.. அனைத்துக்கும் பொழிப்புரை வழங்குகிறது.

நான்காண்டு செருப்படிகளை உள்ளடக்கிய ஒரு செருப்படி. நான்காண்டு விடுதலைப்போருக்குப் பொருத்தமான ஒரு விடையாற்றி. எப்பேர்ப்பட்ட கவித்துவமிக்க காட்சி!

சதாம் தூக்கிலேற்றப்பட்ட காட்சியுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுவரை தன்னை ஆதரித்திராத உலக மக்கள் பலரின் அனுதாபத்தையும் மரியாதையையும் அன்று சதாம் பெறமுடிந்தது. அநீதியான அந்தத் தண்டனைக்கு எதிராக அன்று உலகமே ஆர்த்தெழுந்தது.

ஆனால் அதிபர் புஷ்ஷுக்கு விழும் இந்தச் செருப்படி சொந்த நாட்டு மக்களின் அனுதாபத்தைக்கூட அவருக்குப் பெற்றுத்தரவில்லை. அமெரிக்காவின் அதிகாரத் துப்பாக்கியின் நிழலிலேயே அதன் அதிபர் அம்மணமாக நிற்பதைக் கண்டு அமெரிக்க மக்களே விலா நோகச் சிரிக்கிறார்கள்.

“இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்” என்று சில மாதங்கள் முன் புஷ்ஷிடம் வாலைக்குழைத்தாரே மன்மோகன் சிங், அந்த புஷ்ஷுக்கு விழுந்த செருப்படியை அதே இந்திய மக்கள் ரசிக்கிறார்கள். செய்தி கேளவிப்பட்ட மறுகணமே பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள். நாமும் கொண்டாடுவோம்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலை விடவும் கம்பீரமானது இந்த இரட்டைச் செருப்புத் தாக்குதல். சுதந்திரம் என்ற சொல்லை மனித குலத்துக்கு வழங்கிய மெசபடோமிய நாகரீகம், அந்தச் சுதந்திரத்தின் சின்னமாக மாவீரன் ஸெய்தியை உலக மக்களுக்கும், ஒரு ஜோடி செருப்புகளை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறது.

ஒரு வகையில் இந்தக் காலணிகள் புனிதமானவை

Thanks : VINAVU
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template